10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை

10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்ய தடை விதித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-21 10:32 GMT
சென்னை,

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன. 

இந்தநிலையில்  பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக் கூடாது என்றும் பெண் ஆசிரியர்களை கொண்டு தான் சோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்