கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த அப்துல் கலாம் நினைவிடத்தில் மணல் சிற்பம்
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மணல் சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அடுத்த பேய்க்கரும்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் திரளானோர் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மக்களிடையே அச்சம் பரவியுள்ளது. தமிழகத்திலும் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதேபோன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மருத்துவமனைகள் அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதனிடையே, ராமேசுவரம் அடுத்த பேய்க்கரும்பில் அமைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில், மணல் சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, வணக்கம் சொல்வது, கை கழுவுவது, வாயை மூடி இருமுவது உள்ளிட்ட செயல்பாடுகள் மணல் சிற்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கமும் கொடுக்கப்பட்டு இருந்தது. கலாமின் நினைவிடத்திற்கு வந்த மக்கள், விழிப்புணர்வு மணல் சிற்பத்தையும் பார்வையிட்டு செல்கின்றனர்.