சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 8 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் நேற்று முன்தினம் 2 பேருக்கும், பின்னர் நேற்று 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கடலூரில் இருந்து காய்கறிகளை விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தைக்கு வந்து விட்டு ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் 8 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். தொடர்ந்து அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர்.