சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க நானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் நிற்கிறோம்.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் அரசியல் அறிக்கையை மட்டுமே வெளியிடுகிறார் என கூறினார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும். நீதிமன்ற அனுமதி பெற்று வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், நாளை நடைபெறும் மருத்துவ குழுவினரின் ஆலோசனைக்கு பின்னர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.