தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-08-01 12:54 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,877 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் வெளிநாடு, மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 314 பேருக்கும், திருவள்ளூரில் 305 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 368 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக தேனியில் 327 பேருக்கும், விருதுநகரில் 286 பேருக்கும், தூத்துக்குடியில் 243 பேருக்கும், திருவண்ணாமலையில் 242 பேருக்கும், திருநெல்வேலியில் 181 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 99 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 22 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 77 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 7,010 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 56,738 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்