வைகை அணையில் தண்ணீர் திறப்பு; 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து வைத்துள்ளார்.

Update: 2020-08-31 09:29 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை  அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட இருபோக விவசாய நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்காக, தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதகுகளை திறந்து வைத்தார்.  வைகை அணையின் பிரதான மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மலர்களை தூவினர். தற்போது தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்