உலக அளவில் கொரோனா தொற்று குறையாத ஒரே நாடு இந்தியா தான் - டாகடர் ராமதாஸ் விமர்சனம்

உலக அளவில் கொரோனா தொற்று குறையாத ஒரே நாடு இந்தியா தான் என்று பா.ம.க நிறுவனர் டாகடர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2020-09-09 10:55 GMT
சென்னை,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் 200 நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் தினந்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இன்று ஒரே நாளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் பிரேசிலில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இது இந்திய மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்று குறையாத ஒரே நாடு இந்தியா தான் என்று பா.ம.க நிறுவனர் டாகடர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து டாகடர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தினசரி பாதிப்புகள் அமெரிக்காவில்  28,561 ஆகவும், பிரேசிலில் 17,330 ஆகவும் குறைந்து விட்டது. ஆனால், இந்தியாவில் 89,852 ஆக அதிகரித்து விட்டது. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2.47 லட்சம் தொற்றுகளில்  மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டவை என்றும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியா தான். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதை கருத்தில் கொண்டு  மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்