செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் பெயர் உள்ளதா?- டி.ஜி.பி.க்கு. ஐகோர்ட்டு கேள்வி

செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள், தொழிலதிபர்கள் பெயர்கள் உள்ளதா? என்று தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-09-14 22:30 GMT
சென்னை, 

செம்மரக் கட்டைகள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மெகபூபாஷா என்பவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, மெகபூபாஷாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்தனர்.

பின்னர், “திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி. மக்களை செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் ஆந்திர மாநில அரசு கைது செய்கிறது. ஆந்திர மாநில போலீசாரால் இவர்கள் சுட்டும் கொல்லப்படுகின்றனர். தமிழகத்தில் சரியான வேலை வாய்ப்பு இல்லாததால், இந்த தொழிலாளர்களை அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் தங்களின் சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே உரிய வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் தமிழக டி.ஜி.பி.யை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். அவர் பின்வரும் கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும். செம்மரக் கட்டை கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள், தொழிலதிபர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா?

இந்த கடத்தலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் விதமாக மாற்று வேலை வாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இந்த கடத்தலை தடுக்க தமிழக போலீசாரும், ஆந்திர போலீசாரும் இணைந்து ஏதேனும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரா? இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்