தேசிய கொடியை அவமதித்த வழக்கு - நடிகர் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-16 10:54 GMT
சென்னை,

நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருந்த வீடியோவில் அவர் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாகவும் கூறி அவர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் ராஜரத்தினம் என்பவர் புகார் அளித்தார்.

இதனையடுத்து எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகரின் மன்னிப்பை ஏற்பதாக சென்னை காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும் தேவைப்படும்போது காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் செய்திகள்