தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

Update: 2020-09-21 09:19 GMT
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.   

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி,   கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.  அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்