மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2020-09-26 06:55 GMT
சென்னை,

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையில் எஸ்.பி.பி.யின் பண்ணை தோட்டத்தில் அவரது உடலை புதைப்பதற்கான முன்னேற்பாடுகள் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது.

இதனிடையே நடிகர் விஜய் அங்கு வந்து எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். எஸ்.பி.பி.யின் மகன் சரண் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பாடகரான எஸ்.பி.பி. 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யின் பிரியமானவளே படத்தில் அவரது தந்தையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்