தமிழக போலீசில் கொரோனா தொற்றால் 25 பேர் பலி - 7,800 பேர் பாதிப்பு
தமிழக போலீசில் கொரோனா தொற்றால் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 7,800 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. தமிழக காவல்துறையை பொறுத்த மட்டில் இதுவரை 7,800 பேரை கொரோனா தாக்கி உள்ளது. அவர்களில் 25 பேர் கொடிய கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதனால் சென்னை போலீசில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,572 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 8 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதனால் சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்தது.