எம்.ஜி.ஆர். நகரில் பயங்கரம் டி.வி. நடிகர் வெட்டிக்கொலை கள்ளக்காதல் தகராறில் நண்பர் வெறிச்செயல்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் டி.வி. நடிகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் தகராறில் அவரை வெட்டிக்கொன்ற அவரது நண்பர் ஆட்டோவில் தப்பிச் சென்றுவிட்டார்.

Update: 2020-11-15 18:50 GMT
சென்னை, 

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பாரிவள்ளல் தெருவைச் சேர்ந்தவர் செல்வரத்தினம் (வயது 41). இலங்கையைச் சேர்ந்த இவர் சென்னையில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். கொரோனா பயத்தில், இவர் தனது மனைவி, குழந்தைகளை விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைத்தார்.

இவர் மட்டும் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி இருந்து டி.வி. சீரியலில் நடித்து வந்தார். நேற்று காலை 6.45 மணி அளவில் தனது வீட்டு அருகில் அவர் நின்று கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து அங்கு இறங்கினார். அவர் கையில் அரிவாள் வைத்திருந்தார். மின்னல் வேகத்தில் அந்த மர்மநபர் செல்வரத்தினத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். செல்வரத்தினம் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதே இடத்தில் அவர் துடி,துடித்து பரிதாபமாக இறந்து போனார்.

கொலை வெறியாட்டம் போட்ட அந்த மர்ம நபர் ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டார். இந்த படுகொலை சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவுடன் இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத் போலீஸ் படையுடன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கள்ளக்காதல் பிரச்சினை

கொலை செய்யப்பட்ட செல்வரத்தினம் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதல் பிரச்சினையால் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். விருதுநகரைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவரின் மனைவியுடன் செல்வரத்தினம் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை நண்பர் பலமுறை கண்டித்துள்ளார். நண்பரின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். அந்த நிறுவனத்துக்கு சென்று நண்பரின் மனைவியை செல்வரத்தினம் தனியாக அழைத்து சென்று உல்லாசமாக சுற்றுவாராம்.

இந்த கள்ளக்காதல் பிரச்சினையை மையமாக வைத்து தான், செல்வரத்தினத்தை அவரது நண்பரே ஆட்டோவில் வந்து கொலை செய்து விட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். செல்வரத்தினத்தின் நண்பருடன் மேலும் 3 பேரும் வந்ததாக கூறப்படுகிறது. செல்வரத்தினத்தின் நண்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவம் எம்.ஜி. ஆர். நகர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்