வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-22 11:26 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடக்க உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 4,713 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளிலும், பாதுகாப்பற்ற பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் சென்று தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்த நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதே போல, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் ஆகிய இடங்களில் 4,680 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 43,000 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்