தொடர் மழையால் தமிழகத்தில் 4,266 ஏரிகள் நிரம்பின

தொடர் மழையால் தமிழகத்தில் 4,266 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும் 438 நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

Update: 2021-01-05 19:33 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 266 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. அதேநேரம் 438 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்து 266 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளன.

அதேபோல் 698 ஏரிகள் 91 முதல் 99 சதவீதம் வரை நிரம்பி வருகின்றன. 843 ஏரிகள் 81 முதல் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. 1,346 ஏரிகள் 71 முதல் 80 சதவீதம் நீர் வந்து உள்ளது. 1,555 ஏரிகள் 51 முதல் 70 சதவீதம் நீர் நிரம்பி வருகிறது. 2 ஆயிரத்து 237 பாசன ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 2 ஆயிரத்து 756 ஏரிகளில் ஒன்று முதல் 25 சதவீதமும், 438 ஏரிகளில் தண்ணீரே இல்லாத நிலையும் உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் மாநிலம் முழுவதும் 90 பெரிய மற்றும் சிறிய அளவிலான அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன (224.297 டி.எம்.சி.) அடியாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அணைகளில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 636 மில்லியன் கன அடி (164.636 டி.எம்.சி.) சேமிக்கப்பட்டு உள்ளது. இருப்பு சதவீதத்தை பார்க்கும் போது 73.40 சதவீதமாகும். இதனால் வருகிற கோடைக்காலத்தில் மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. அதேபோல் நிலத்தடி நீரும் எதிர்பார்த்த அளவு உயர்ந்து உள்ளது. மேற்கண்ட தகவலை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்