பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூன்று பேரையும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2021-01-06 05:41 GMT
பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள  அருளானந்தம், பைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மூன்று பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, மூன்று பேரையும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்