"ராகுல் காந்தி வருகையால் அரசியல் சூழல் மாறியுள்ளது" - கே.எஸ்.அழகிரி
ராகுல் காந்தி வருகையால் அரசியல் சூழல் மாறியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மறைந்த எம்.பி வசந்தகுமாரின் நினைவாக மாநில அளவிலான ஆடவர் குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோப்பைகளையும் பரிசு பொருட்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
அமைதியான முறையில் போராடிய விவசாயிகளுக்கு மத்தியில் மத்திய அரசு வன்முறையை தூண்டிவிட்டுள்ளது. மூன்று தினங்கள் தமிழகத்திலே சுற்றுபயணம் செய்து மக்களுடைய மனதில் ராகுல் காந்தி நீங்கா இடம் பிடித்துள்ளார். பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்திற்கு வர மீண்டும் அழைத்துள்ளோம். ராகுல் காந்தி வருகையால் அரசியல் சூழல் மாறியுள்ளது.
சர்வாதிகார பா.ஜ.கவை எதிரித்து சுயமரியாதையற்ற, ஊழலில் தழைத்திருக்கின்ற அதிமுகவை எதிர்த்து எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.