திண்டுக்கல் கோட்டை குளத்தில் தவறி விழுந்து மாணவன் பலி

திண்டுக்கல்லில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன், கோட்டை குளத்தில் தவறி விழுந்து பலியானான்.

Update: 2021-02-08 21:56 GMT
திண்டுக்கல்:

பள்ளி மாணவன் 
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மகேஸ்வரன் (வயது 13). இவன் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். 

இந்த நிலையில் நேற்று மகேஸ்வரனின் நண்பர்கள் சிலர், திண்டுக்கல் கோட்டை குளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க சென்றனர். அவர்களுடன் மகேஸ்வரனும் சென்றான்.

அங்கு அவர்கள் தூண்டில் போட்டு குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கரையில் நின்று கொண்டிருந்த மகேஸ்வரன், எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து விட்டான்.
 உடனே அவனுடைய நண்பர்கள் கூச்சலிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்தனர். 

அதை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் மகேஸ்வரன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான்.
உடல் மீட்பு 
இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் மற்றும் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, குளத்தில் மூழ்கிய மகேஸ்வரனின் உடலை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். 

இதைத் தொடர்ந்து அவனுடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்