தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்" உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
மதுரை மேலூரில் பள்ளிக்கூடம் அருகே அமைக்கப்பட்ட மதுக்கடையை அகற்றக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் அருகே வைக்க அது ஒன்றும் மளிகைக் கடையோ புத்தகக் கடையோ இல்லை. ஒட்டுமொத்த தமிழகமும் மதுவில் மூழ்கியுள்ளது. ஆனால் அது பற்றி மாநில அரசு கவலைப்படவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளது. மாநில ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மதுபானம் ஆறாக ஓடுகிறது. பூரண மதுவிலக்கை, ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும்.
பூரண மதுவிலக்கை ஏற்படுத்தினால், குற்றங்கள் குறையும், தனிநபர் வருவாய் உயரும், குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும், இவை உள்பட மாநிலத்தில் பல்வேறு மேம்பாடுகள் ஏற்படும். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.