நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பயங்கரம்: தி.மு.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

முக்கூடல் அருகே தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-02-19 02:52 GMT
செல்லத்துரை
தி.மு.க. இளைஞரணி செயலாளர்
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 45). இவர் தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார்.நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் செல்லத்துரை தனது கோழிப்பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை
அப்போது அவரை ஒரு மர்மநபர் வழிமறித்தார். உடனே தனது மோட்டார் சைக்கிளை செல்லத்துரை நிறுத்தினார். திடீரென அந்த நபர் அரிவாளால் செல்லத்துரையை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.சற்றும் எதிர்பார்க்காத நிலையில் நடந்த இந்த தாக்குதலில் அவரது முதுகு மற்றும் கழுத்து பகுதியில் பலமான வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் சரிந்து விழுந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்லத்துரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தி.மு.க.வினர் திரண்டனர்
இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை மற்றும் கட்சி நிர்வாகிகள் முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. மேலும், அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.முக்கூடல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி யார்? எதற்காக செல்லத்துரையை படுகொலை செய்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்