விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2021-02-21 03:07 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால், ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி, விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கடும் பனி காணப்பட்ட நிலையில், மீண்டும் பருவம் தவறி திடீரென மழை பெய்து வருகிறது. 

இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக  வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும்,  தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனுர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கடலூரில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணி, செய்யார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுச்சேரி, காலாப்பேட், கனகசெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்