பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

Update: 2021-02-22 16:46 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனா பேகம் (வயது 35). மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஹசீனா பேகம் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள ஓடை பகுதியில் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார்.

அதிகாலையில் பெய்த மழையால் ஸ்கூட்டரை பாதுகாப்பான இடத்தில் எடுத்து விடுவதற்காக அவர் சென்றார். அப்போது மழைவெள்ளத்தில் ஹசீனா பேகம் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் தண்ணீர் அவரை இழுத்து சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு தீயணைப்பு துறையினரும், மேட்டுப்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. நேற்று மதியம் கனகன் ஏரியில் ஹசீனா பேகத்தின் உடல் கரை ஒதுங்கியது. உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த ஹசீனா பேகம் என்பவர் கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவரது மறைவால், அவரை பிரிந்து வாடும் கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு கருணை தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்