முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்

முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்.

Update: 2021-04-07 22:51 GMT
சென்னை, 

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இன்னொருபுறம் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகளும் நடக்கின்றன. அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் பொதுமக்களும் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அனைவரும் தவறாது ஓட்டு போட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நடிகர் பார்த்திபன் ஓட்டு போடவரவில்லை. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தனக்கு அலர்ஜி ஏற்பட்டதால் ஓட்டுபோட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘‘வணக்கமும் நன்றியும். ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு. வருத்தமும் இயலாமையும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட எனக்கு திடீரென ஒவ்வாமையில் கண், காது, முகம் சிவந்து விட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்து கொண்டேன். தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிக சிலருக்கு மட்டுமே இது போன்ற பிரச்சினை. அதுவும் எனக்கு ஏற்கனவே அலர்ஜி பிரச்சினைகள் இருந்ததால் மட்டுமே இப்படி ஆனது’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்