வேலூர் அருகே வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைக்கப்பட்டது

குடியாத்தம் அருகே கலர்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைக்கப்பட்டது.

Update: 2021-04-15 07:57 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள கலர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் தனது குடும்பத்தினருடன் காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்து நேற்று (ஏப்.14) இரவு உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு இரண்டு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கத் தொடங்கியது.

சிறுத்தையின் திடீர் தாக்குதலால் அலறியடித்து எழுந்தவர்கள், அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கினர். இதைப் பார்த்த சிறுத்தையும் அருகில் இருந்த அறைக்குள் சென்றது. அப்போது, வேலாயுதம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியேறியதுடன் முன்பக்கக் கதவைப் பூட்டினார். இதனால், வீட்டினுள் சிறுத்தை சிக்கிக் கொண்டது.

சிறுத்தை தாக்கியதில் வேலாயுதத்தின் மனைவி பிரேமா, மகன் மனோகரன், மகள் மகாலட்சுமி ஆகியோர் காயமடைந்தனர். அக்கம் பக்கம் வீட்டில் வசிப்பவர்கள் இவர்களின் சத்தம் கேட்டு ஒன்று திரண்டனர். சிறுத்தை தாக்கியதால் காயமடைந்தவர்களை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், பிரேமாவுக்கும் மனோகரனுக்கும் அதிக காயம் ஏற்பட்டிருந்தது.

வீட்டுக்குள் சிறுத்தை சிக்கிய தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலர் பார்கவ தேஜா, பேரணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா மற்றும் வனக் காவலர்கள் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர், வீட்டுக்குள் சிக்கிய சிறுத்தையை பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசித்தனர். அதில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க திட்டமிட்டனர்.

சிறுத்தையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்த குறி பார்க்கும் வனத்துறையினர்.
அதன்படி, ஓசூரில் இருந்து இன்று (ஏப்.15) வந்த சிறப்பு மீட்புக் குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை சிறுத்தைக்குச் செலுத்தினர். 

சிறிது நேரத்தில் மயங்கிய சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அருகில் உள்ள வனப்பகுதியில் சிறுத்தையை விட்டுவிட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்