இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; கடலூரில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது; நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கடலூரில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-05-21 18:03 GMT
எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆக்சிஜன் துண்டிப்பு
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி, நடு வீதியில் வசித்து வந்த கண்ணன் முதலியார் என்பவருடைய மகன் ராஜா (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 8-ந் தேதி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், நேற்று காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள் என்றும், 20.5.2021 அன்று காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது அங்கு வந்த பணியில் இருந்த அரசு டாக்டர் மற்றும் செவிலியர்கள் 
அவருடைய வென்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு வெளியேற முற்பட்டனர் என்றும், அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவியை (கஸ்தூரி) தடுத்துவிட்டு, வென்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துச்சென்று விட்டனர் என்றும் அவரது மனைவி புகார் செய்துள்ளார்.

குற்றவியல் நடவடிக்கை
மேலும், போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர் என்றும், இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விட்டார் என்றும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வலம் வருவதை பார்க்கும் போது நெஞ்சு பதைப்பதைக்கிறது.இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்