திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிறுவன் யாகம் செய்வது போல் பரவும் வீடியோ காட்சிகளால் பரபரப்பு போலீசார் விசாரணை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேரத்தில் சிறுவன் யாகம் செய்வது போல் பரவும் வீடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-06 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவில் அருகில் மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை சாமியார் போன்று சித்தரித்து கொண்டு பக்தர்களிடம் பேசி வருவதாகவும், இரவு நேரங்களில் சிறுவனை வைத்து அவர் யாகம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக வீடியோவும் இணையதளங்களில் பரவி வருகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி, அந்த இடத்தில் யாகம் போன்றவை நடத்த கூடாது என்று கூறி உடனே இடத்தை காலி செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் வீடியோ பதிவில் வந்த சிறுவன் யார், அந்த பெண்ணின் மகனா? என குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடையாள அட்டை வழங்க வேண்டும்

அதுமட்டுமின்றி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அதில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இங்கு வந்து தங்குவதாகவும் அடிக்கடி புகார்கள் வருகிறது.

கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களை வரன்முறை படுத்த அவர்களுக்கு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க மாவட்ட காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை பாதியில் கைவிடப்பட்டது.

எனவே கிரிவலப்பாதையில் உள்ள சாமியார்களை வரன்முறைப்படுத்த மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்