ஊரடங்கு தளர்வுகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது ; கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை - சென்னை ஐகோர்ட்

ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது ; கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை இது என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.

Update: 2021-06-09 09:18 GMT
சென்னை

கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர்  வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில்  விசாரணைக்கு வந்தது. 

கொரோனா ஊரடங்கில் நேற்று முதல் தளர்வுகள் அமலாகியுள்ள நிலையில், அதுகுறித்து தலைமை நீதிபதி அமர்வு, “இயல்புநிலை திரும்பியது போல வெளியில் காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை” என்று கருத்து தெரிவித்தது. 

இதுகுறித்து பதிலளித்த தமிழ்நாடு அரசு கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல் துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது கனிவுடன் நடப்பதை மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளனர்  என்று கூறியது. 

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு, ஊரடங்கு காலத்தில்  மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் எனவும், மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் என்பதை மக்கள் உணரும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.  

மேலும் செய்திகள்