ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைநாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும் என்றும், வேளாண் பணிகளுக்கும் அத்திட்டத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-29 00:02 GMT
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்

கொரோனா வைரஸ் பரவலால் கிராமப்புற பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள சூழலில், மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தால் நிறைவேற்ற முடியவில்லை என்று 
புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊரக மக்களை ஓரளவாவது பசியில்லாமல் பாதுகாக்க இத்திட்டத்தால்தான் முடியும் எனும் நிலையில், அதற்கான நிதி குறைக்கப்பட்டது நியாயமற்றது. பல மாநிலங்களில் இந்த திட்டத்தை நம்பிதான் மக்கள் வாழ வேண்டியிருக்கிறது. கொரோனா பாதிப்பு எப்போது தீரும் என்பது தெரியாத நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அந்தக் குடும்பங்கள் வேறு வாழ்வாதாரமும் இல்லாமல், ஊரக வேலையும் இல்லாமல் எப்படி வாழ முடியும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

நீட்டிக்க வேண்டும்
தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு காரணம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி பெருமளவில் குறைக்கப்பட்டதுதான். கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட 389 கோடி மனித நாட்களை விட சற்று கூடுதலாக 400 கோடி மனித வேலை நாட்களை உருவாக்க வேண்டுமானால் கூட, மத்திய அரசு மட்டும் ரூ.1,13,500 கோடி ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால் மிக மோசமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்கலாம். எனவே, 2021-22-ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படியான வேலை நாட்களை 150 ஆக உயர்த்துவதுடன், வேளாண் பணிகளுக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்