கர்நாடகாவில் புதிதாக கட்டப்பட்ட அணையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 870 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்

கர்நாடகாவில் புதிதாக கட்டப்பட்ட அணையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 870 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கதமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-04 02:08 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி உள்ளது. இங்கு தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய அணை கட்ட தொடங்கியது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 10 மாதங்களில் இந்த அணையை கர்நாடக அரசு ஓசையின்றி கட்டி முடித்து விட்டது. கர்நாடகத்தின் மாலூர், பங்காருபேட்டை, கோலார் சுற்று வட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த அணை கட்டப்பட்டதாக கர்நாடக அரசு கூறுகிறது. இந்த அணையால் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பர்கூர் சட்டசபை தொதிக்கு உட்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

870 ஹெக்டேர் பாதிப்பு

குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 870 ஹெக்டேர் புன்செய் பாசன வசதி பெறும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். மார்கண்டேய நதியை சார்ந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கூறும்போது, ‘மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டி உள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே தமிழக அரசு விரைந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய பாசனத்திற்கு தேவையான தண்ணீரை பெற்று தரவேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்