இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததுடன் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்த சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-04 23:55 GMT
ரோந்து
ராமேசுவரத்தில் இருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 30-க்கும் மேற்பட்டோர் 5 குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர். அங்கு ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் உடனடியாக படகுகளை எடுத்துச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் கடலில் வீசி இருந்த வலைகளை அவசரம், அவசரமாக எடுத்துக்கொண்டு இருக்கும்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீண்டும் எச்சரித்தனர். இதையடுத்து மீனவர்கள் ஒரு சில படகுகளின் வலைகளை அறுத்து விட்டு உடனடியாக படகுகளை திருப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுகள் பாதியிலேயே கரை திரும்பியதால் குறைந்த அளவே மீன்கள் கிடைத்திருந்தது. ஏற்கனவே இலங்கை கடற்படையினர் பழுதான பஸ்களை நடுக்கடலில் போட்டு உள்ளதால் மீனவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.

பாதிப்பு
76 நாட்கள் கழித்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மீனவர்கள் பெருத்த நஷ்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து இலங்கை கடற்படையின் தொல்லை இருந்தால் முழுமையாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை கடற்படையின் தொந்தரவு இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

மேலும் செய்திகள்