உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2021-07-06 22:49 GMT
பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் போத்திராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

ஜெயலலிதா இல்லாத சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம். 43 தொகுதிகளில் 19,8500 வாக்குகளை கூடுதலாக பெற்று இருந்தால் இன்றைக்கு நாம் ஆட்சியில் அமர்ந்து இருப்போம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7.5 இட ஒதுக்கீட்டிணை செயல்படுத்தி அதன் மூலம் 485 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க செய்தார். 

இதன் மூலம் சமூக நீதி காத்த இயக்கமாக அ.திமுக உள்ளது. எம்ஜிஆர் தொடங்கிய இந்த இயக்கத்தை அழிப்பதற்கு ஒருவர் அ.ம.மு.க. என்ற கட்சியை தொடங்கி, அனைவரையும் அழைத்தார். ஆனால் இன்றைக்கு அந்த கட்சி விலாசம் இழந்துபோய் உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்