மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-07-09 01:14 GMT
சென்னை,

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இதுகுறித்த வழக்கு சுப்ரீம்கோட்டில் நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மத்திய நீர்வளத் துறை மந்திரியை சந்தித்த பிறகும், ‘மேகதாதுவில் அணை கட்டப்படும்’ என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி அறிவித்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

மேகதாதுவில் அணை கட்ட 2014-ம் ஆண்டு கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக ரூ.25 கோடியை ஒதுக்கியபோதே, அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடகா எடுக்க கூடாது என உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், எந்த நீர் திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்றும் வலியுறுத்தி 2 தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதாவின் ஆணைப்படி என்னால் கடந்த 5.12.2014 மற்றும் 27.3.2015 ஆகிய நாட்களில் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பாலைவனமாக...

இந்த தீர்மானங்கள் கடிதங்கள் மூலம் மத்திய அரசுக்கு உடனடி நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக 26.3.2015 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்-மந்திரியின் தன்னிச்சையான அறிவிப்பு தமிழக மக்களை, குறிப்பாக விவசாய பெருங்குடி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதன் விளைவாக பாசனத்துக்கும், குடிநீருக்கும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு பாலைவனமாக கூடிய சூழ்நிலையும் உருவாகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

மாநில உறவை பாதிக்கும்

‘அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்று கர்நாடக முதல்-மந்திரி தன்னிச்சையாக அறிவித்து இருப்பதற்கு அ.தி.மு.க.வின் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஒருதலைபட்சமான செயல் இரு மாநில உறவையும் பாதிக்கும்.

இதில், தமிழக முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி, மேகதாது அணை கட்டுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்