அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை

அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-07-22 11:26 GMT
சென்னை,

தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14-ந்தேதி முதல் மேம்படுத்தப்பட்ட ‘இன்டர் ஆக்டிவ் குரல் மறுமொழி' (ஐ.வி.ஆர்.எஸ்.) முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை 044-24325050 என்ற எண்ணை தொடர்புக்கொள்வதன் மூலம் பயன்படுத்தலாம்.

இந்த சேவையின் மூலமாக தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேம நல நிதி, ஆசிரியர் சேம நல நிதி சந்தாதாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி நடப்பு இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதித்தொகை பெறுவதற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோரின் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறும் பிற அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் சிறப்பு பிரிவு ஓய்வூதியதாரர்களான அரசு கலைஞர்களை தவிர வேறு நபர்கள், கலைஞர் ஓய்வூதியம், தமிழ் அறிஞர் ஓய்வூதியம், பத்திரிகையாளர் ஓய்வூதியம், நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம், சமஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதி பயன்படும். மேலும் சுயவரைதல் அதிகாரிகள் தங்களது ஊதிய சீட்டினை பதிவேற்றுதல் குறித்த தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்