அர்ச்சகர் நியமனம்: தற்போதைய நிலையே நீடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலைத்துறை விளம்பரம் வெளியிட்டது.

Update: 2021-08-09 12:33 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலைத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகம விதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும். மேலும், மனுவுக்கு ஆகஸ்டு 25-ந்தேதிக்குள் இந்து சமய அறநிலைய துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்