நண்பர்களுடன் கடலில் குளித்த போது பரிதாபம்: ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி

எண்ணூரில் நண்பர்களுடன் கடலில் குளித்து விளையாடிக்கொண்டிருந்த பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

Update: 2021-08-10 18:23 GMT
திருவொற்றியூர்,

செங்குன்றம், அம்பேத்கர் நகர், ராஜம்மாள் தெருவை சேர்ந்தவர் பாபு. கூலித்தொழிலாளி. இவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 18). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர் தனது நண்பர்களான தினேஷ், அல்டாப்பு, டி-சில்வா ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை எண்ணூர் தாழங்குப்பம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றார்.

அப்போது 4 பேரும் நீரில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென வந்த ராட்சத அலை தட்சிணாமூர்த்தியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதனை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கூச்சலிட்டனர். உடனே அருகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு அவர்கள் முறையிட்டனர்.

உடல் கரை ஒதுங்கியது

உடனடியாக மீனவர்கள் படகுகளில் சென்று கடலில் குதித்து மாணவர் தட்சிணாமூர்த்தியை தீவிரமாக தேடினர். இரவு நேரமாகி விட்டநிலையில் மாணவரை மீட்க முடியாததால் மீனவர்கள் கரை திரும்பினர். இந்த நிலையில் இறந்த நிலையில் அவரது உடல் நேற்று காலை அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்