மேகதாது அணைக்கு எதிராக போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட 349 பேர் மீது வழக்கு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட 349 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்,
மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு தீவிரம் காட்டி வரும் கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் தமிழக எல்லையான ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் மினி டிராக்டரை தானே ஒட்டி வந்து பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகவுக்கு எதிராக கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அதே போல் கர்நாடகா அணைகட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மத்தியிலும், கர்நாடக மாநிலத்திலும் ஆட்சி செய்துவரும் பா.ஜனதா அரசு தமிழகத்திற்கு விரோதமாக அணை கட்டியே தீருவோம் என்ற முடிவை வன்மையாக கண்டிக்கிறோம். இரு மாநிலத்தவரும் சகோதரத்துவத்துடன் பழகி வரும் நிலையில் பிடிவாத போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும், இல்லை என்றால் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு கர்நாடக மாநிலம் ஆளாக நேரிடும் என்று கூறினார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி கூட்டம் கூடியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உட்பட 349 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.