தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது ‘போக்சோ’ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சென்னை
மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றியவர் நாகராஜன் (வயது 59). இவர் ‘சென்னை பிரைம்’ என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான மைதானத்தில் வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வந்தார்.
இந்த நிலையில் நாகராஜன் மீது அவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். அந்த மனுவில், ‘பிசியோதெரபி’ பயிற்சி அளிப்பதாக கூறி நாகராஜன் ‘செக்ஸ்’ சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் பூக்கடை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘போக்சோ’ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.நாகராஜன் மீது மேலும் பல வீராங்கனைகள் புகார் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது சென்னை போக்சோ நீதிமன்றத்தில் இன்று 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.