கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு துக்கம் தாங்காமல் அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால், துக்கம் தாங்காமல் தாய் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-29 18:17 GMT
தென்காசி,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரியநாயகிபுரம் பஞ்சாயத்து கே.எம்.அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பெரியதாய் (வயது 60). இவர்களுடைய மகன் திருமலைகுமார் (32). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் திருமலைகுமார் தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய திருமலைகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய் தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, இறந்த திருமலைகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மகன் இறந்த துக்கத்தில் பெரியதாய் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் நேற்று அதிகாலையில் தனது தோட்டத்துக்கு சென்று, மகன் தவறி விழுந்து இறந்த கிணற்றிலேயே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததால், துக்கத்தில் தாயும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்