இலங்கை தமிழர்களின் விருப்பத்தை கேட்டறிந்து குடியுரிமை வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, வைகோ வேண்டுகோள்

இலங்கை தமிழர்கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியவர்கள் அல்லர் என்றும், அவர்களின் விருப்பத்தை கேட்டறிந்து குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

Update: 2021-09-02 19:15 GMT
சென்னை,

1983-ம் ஆண்டு, இலங்கையில் வெடித்த ஜூலை இனக்கலவரத்தின்போது தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். எனவே, உயிர்தப்புவதற்காக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத்தமிழர்கள், படகுகளில் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுடன், மலையக தமிழர்களும் வந்தனர். அப்போது வந்த அனைவருமே, தமிழ்நாட்டில் 100 முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

அவர்களில், மலையக தமிழர்கள் சுமார் 28 ஆயிரம் பேர். இப்போது, அவர்களுக்கு பிறந்த குழந்தைகளையும் சேர்த்து, 45 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உள்ளனர். இந்தியக் குடியுரிமை சட்டத்தின்படி, இவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள். ஆனால், இவர்கள் அனைவருமே, அகதிகளாக வந்து குடியேறியவர்களாக கருதப்படுவதால், இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகின்றது.

குடியுரிமை வழங்கவேண்டும்

சட்ட விரோதமாக வந்தவர்கள் என்றால், ரகசியமாக வந்திருக்க வேண்டும். ஆனால், போரின் காரணமாக அடைக்கலம் தேடிவந்தவர்கள். அரசால் முறையாக வரவேற்று, ஆவணங்களில் பதிவுபெற்று, முகாம்களில் குடியமர்த்தப்பட்டவர்கள். எனவே, இவர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக, இந்திய, தமிழ்நாடு அரசுகளின் உதவிகளை பெற்று வருகின்றவர்கள்.

ஒருவர் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெறலாம். இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருப்பதால் குடியுரிமை பெறலாம். இங்கே உள்ளவர்களை திருமணம் செய்தவர்கள் குடியுரிமை பெறலாம். இப்படி பல வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், சட்டத்திற்கு எதிராக குடியேறியவர்கள் என்று கூறி, அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல என அறிவித்து, இலங்கைத் தமிழர்களுடைய விருப்பத்தை கேட்டு அறிந்து, குடியுரிமை வழங்கவேண்டும். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு, கூடிய விரைவில் தீர்வு காணவேண்டும். மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்