கோடநாடு எஸ்டேட் மேல் 3 நாட்களாக பறந்த ஆள் இல்லா விமானம் ; போலீசில் புகார்
தொடர்ந்து 3 நாட்களாக எஸ்டேட் மேல் டிரோன் பறந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே வழக்கில் திடீர் திருப்பமாக கோர்ட்டு அனுமதி பெற்று, சயானிடம் போலீசார் மறு விசாரணை நடத்தி, ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதில் வழக்கில் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து கூறியதாக தெரிகிறது. மேலும் விபத்தில் இறந்த ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், சம்பவம் நடந்த நாளில் கோத்தகிரி மற்றும் கூடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழகின் விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோடநாடு எஸ்டேட் மேல் ஆள் இல்லா விமானம் டிரோன் பறந்ததாக எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 3 நாட்களாக எஸ்டேட் மேல் டிரோன் பறந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.