தமிழ் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகமெங்கும் பயணம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொருநை ஆற்றங்கரை நாகரீகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-09-09 06:00 GMT

சென்னை

தமிழக சட்டசபையில் 110 வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார் அதன் விவரம் வருமாறு:-

கீழடி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது

கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. அங்கு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

கொற்கைத் துறைமுகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருநை ஆற்றங்கரை நாகரீகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, ஒரிசாவின் பாலூர், கர்நாடகாவின் தலைக்காடு ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு முயற்சிக்கப்படும். தமிழ் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகமெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் துவங்கித்தான் எழுதப்பட வேண்டும்  என கூறினார்.

மேலும் செய்திகள்