உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-09-17 22:59 GMT
சென்னை,

தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின், பா.ம.க. சார்பில் கசாலி உள்பட பலர் போட்டியிட்டனர். அதில் உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கசாலியைவிட 69 ஆயிரத்து 355 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வக்கீல் எம்.எல்.ரவி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில், உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார். அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது செல்லாது என்றும், இந்த தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றும் அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், தேர்தல் ஆணையம் 2 வாரத்துக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை அக்டோபர் 1-ந் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்