ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல்; தேர்தல் ஆணையம் வெளியீடு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ந்தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ந்தேதி தொடங்கியது. இதில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் கடந்த 22ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
வேட்புமனுக்களை திரும்பப்பெற 25ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இதன்படி, 2,981 பதவியிடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 14,571 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். இறுதியாக, 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் போட்டியில் உள்ளனர்.