தெருவில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தெருவில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-10-05 22:53 GMT
சென்னை,

சீர் என்ற தொண்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும். அதுபோல சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரிந்த 396 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டு இருந்தது.

அதை படித்து பார்த்த நீதிபதிகள், ‘அரசால் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட சென்னையில் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருக்கும் மனநலம் பாதித்தவர்களைக் கண்டறிந்து கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று கூறினர்.

பின்னர், மனநலம் பாதித்தவர்களுக்கான அரசு காப்பகத்தை சீரமைக்கவேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வார காலத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்