குலசேகரன்பட்டினம் தசரா: முத்தாரம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 2-ம் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து காப்பு வாங்கி சென்றனர்.

Update: 2021-10-08 00:27 GMT
குலசேகரன்பட்டினம், 

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

2-ம் திருநாளான நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்தனர். ஆன்லைன் பதிவு மற்றும் நேரடியாக தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொதுவாக பக்தர்கள் கடலில் புனித நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்வர். ஆனால், நேற்று கடற்கரை பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

விரதம் இருக்கும் பக்தர்கள், கொடியேற்றம் நடைபெறும் அன்று கோவிலுக்கு வந்து காப்பு வாங்கி கட்டிக் கொள்வது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் கொடியேற்றத்தின்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் நேற்று கோவிலில் பக்தர்களுக்கு காப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கோவில் அலுவலகத்தில் பக்தர்கள் மற்றும் தசரா குழுவினருக்கு 5, 10, 50, 100 என்று பல்வேறு எண்ணிக்கையில் காப்புகள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காப்புகளை வாங்கி சென்றனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்