தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-10-08 01:08 GMT

சென்னை,

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்ய கூடும்.

இதேபோன்று, 9ந்தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வருகிற 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்