உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகலுக்குள் முழுமையான முடிவுகள் - மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரம் பிற்பகலுக்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2021-10-13 06:28 GMT
சென்னை, 

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 

மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இதுதவிர ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சைகள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால், அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டாவது நாளாக வாக்கு எண்ணும் பணிகள் இன்றும் நீடிக்கின்றன. தற்போது வெற்றி பெற்றவர்களின் விவரம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முழுமையான முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்:-

தி.மு.க. - 991 இடங்களிலும், அ.தி.மு.க. - 200 இடங்களிலும், மற்றவை 139 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல் - மாவட்ட கவுன்சிலர் முன்னிலை நிலவரம் :-

தி.மு.க. - 132 இடங்களிலும், அ.தி.மு.க. - 2 இடங்களிலும், மற்றவை 0 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

மேலும் செய்திகள்