அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆா். விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆா். விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

Update: 2021-10-26 22:52 GMT
சென்னை,

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆா். விஜயபாஸ்கா் இருந்தபோது, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றது என புகாா் எழுந்தது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது.  இதனையடுத்து, கடந்த திங்கள்கிழமை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் சேகா் ஆகியோா் நேரில் ஆஜராகினா். 
அவா்களிடம் சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.  தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையும் விசாரணைக்காக எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆஜராகியிருந்தாா். அவரிடம் காலை முதல் பிற்பகல் 1.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே அவா், தன்னிடம் தீபாவளிக்கு பிறகு விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  அவரது வேண்டுகோளை ஏற்று தீபாவளி பண்டிகைக்கு பின் அவரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்