முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி நேற்று மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதையொட்டி 58 கிராமங்களில் கடைகளும் அடைக்கப்பட்டன.

Update: 2021-11-07 20:04 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரில் கர்னல் பென்னிக்குவிக் பஸ் நிலையம் முன்பு முல்லைப்பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பெண்கள் உள்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கடையடைப்பு

பெரியாறு அணை பாசனத்தின் கடைமடை பகுதியான வெள்ளலூர் நாட்டை சேர்ந்த 58 கிராமத்தினர் கடையடைப்பு செய்து 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குடும்பத்தினருடன் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ மற்றும் வாடகை வாகன சங்கத்தினர், மக்கள் உரிமை கழகத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். குறிஞ்சிக்குமரன் உள்பட சங்க நிர்வாகிகள் பேசினர்.

152 அடியாக உயர்த்த வேண்டும்

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்குவதை கேரளா அரசு தடுத்தது கண்டிக்கதக்கது. 152 அடியாக அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.

120 ஆண்டுகளாக பெரியாறு அணை தண்ணீரை தமிழக அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டுமே திறந்து வந்த மரபை மீறி கேரள அமைச்சர்கள் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டிப்பது, உணவுப்பொருட்களுக்கு தமிழகத்தை மட்டுமே கேரளா நம்பியுள்ளது. எனவே தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யக்கூடாது.

இதுதொடர்ந்தால் கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது. என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன. இதுசம்பந்தமாக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்