தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை..!

தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-18 04:57 GMT
சென்னை,

வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் தற்போது காலையில் இருந்து கனமழை பெய்து வந்தாலும், பிற்பகலில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று “ரெட் அலர்ட்”  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) வானிலை மையம்  விடுத்துள்ளது. 

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இந்நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.  

மேலும் செய்திகள்